இப்படிக்கூட சில மரணச்சடங்குகள்

 


மரணச்சடங்குகள் உலகம் முழுவதிலுமுள்ள அனைத்து சமயங்களுக்கும் பொதுவான விடயம்.இவற்றில் சமயம் கலாச்சாரத்தில் பாரியவேறுபாடுகள் உண்டு.ஏன் ஒரே சமயத்துக்குள்ளுமே பிரதேச ரீதியாக வேறுபாடுகள் இருப்பதுண்டு.ஆனால் அனைத்திலும் பொதுவான அம்சமாக மதிக்கப்படுவது இறந்தவருக்கு மரியாதைசெலுத்தல்.இது அனைத்து மரணசடங்குகளிலும் பின்பற்றப்படும் விடயம்.பலர் சொர்க்கம் நரகம் என்ற நம்பிக்கைகள் இறந்ததன் பின்னரான வாழ்க்கை என்பவற்றில் நம்பிக்கைகளுடன் இவற்றை செய்கின்றார்கள்.இந்துசமயத்தில் இறந்த உடலை எரித்தல் முக்கியமுறையாக இருந்தாலும் சடங்கு  நடைபெறும் முறை இடத்திற்கிடம் மாறுபடுகின்றது சிலர் வாழையை அடையாளமாக சந்திகளில் கட்டுவார்கள் சிலர்  தென்னோலையைக்கட்டுகின்றார்கள்.பாடையில் கொண்டு செல்லல் அலங்கரித்த பல்லக்கில் கொண்டுசெல்லல் போன்று பல முறைகள் உள்ளன.உலகெங்கிலும் உள்ள இறுதிச்சடங்குகளைப்பார்ப்போம்.

காரில் இருந்துகொண்டு இறுதி அஞ்சலி

இது அமெரிக்காவில் வழக்கமான முறையாக இருக்கின்றது..இறந்தவரின் உறவினர்கள் உடலை பொதுவான ஓரிடத்தில் பார்வைக்காக வைத்திருப்பார்கள்.நீங்கள் காரில் அவ்விடத்திற்கு சென்று காரில் இருன்டபடியே அஞ்சலி செலுத்தலாம்.பின்னர் உங்களின் வருகையை  குறிப்பேட்டில் பதிவு செய்துவிட்டு சென்றுவிடவேண்டியதுதான்.இறங்கவே தேவையில்லை.

இணையத்தின் மூலம் அஞ்சலி
 நமது உறவுகள் பல ஆயிரக்கணக்கான தூரத்தில் இருக்கின்றார்கள்.இப்படி அதிக தூரத்தில் இருக்கும் உறவுகளினால் திடீர் என்று ஏற்படும் இவ்வாறான மரணங்களுக்கு உடனடியாக வருகைதரமுடிவதில்லை.உடனடியாக விமான டிக்கட்டுகள் எடுப்பதும் பல சமயங்களில் அசாத்தியமே இவ்வாறான நிலைமைகளில் இணையம் கைகொடுக்கின்றது.இணையத்தில்  பல சைட்கள் இதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன.இதன் மூலம் வேறோரு இடத்தில் நடைபெறும் இறுதிச்சடங்கை இவர்கள் இணையத்தின் உதவியுடன் பார்வையிடமுடியும்.ஸ்கைப் தற்பொழுது இதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றது.
(  எமது பிரதேசத்திலும் தற்பொழுது இம்முறையைக்கையாள்கின்றார்கள்.சடலத்திற்கு அருகே அனைவரும் அழுதுகொண்டிருக்கும்போது வெப் கமராவை கொண்டுவந்து வைத்துவிடுவார்கள்.ஆரம்பத்தில் இந்த நடைமுறை  எனக்கு எரிச்சலாக இருந்தது.ஆனால் வேறு என்ன செய்ய முடியும்.பல காரணங்களால் வர முடியாமல் அதிக தூரத்தில் இருக்கும் உறவுகளுக்கு இந்தவழியின் மூலம்தான் உதவ முடியும்)

வானவேடிக்கைகளின் மூலம் அஞ்சலி

இதை நடத்துவதற்கு சில கம்பனிகள் உள்ளன.இறந்தவரின் தகனத்தின் போது அடக்கத்தின்போது வானவேடிக்கைகள் மூலம் அஞ்சலி செலுத்தப்படுகின்றது.இதன் போது வெளிவரும் பாரிய சத்தம் அவரது நேர்மையான வாழ்க்கைக்கு ஆதாரமாக நம்பப்படுகின்றது.அத்துடன் வானவேடிக்கைகள் சொர்க்கத்துக்கு செல்வதாகவும் நம்பப்படுகின்றது.

கழுத்தை நெரித்தல்

பசுபிக் தீவுகளில் ஒன்றான பிஜிதீவில் இப்பயங்கரமான  இறுதிச்சடங்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.யாராவது இறந்துவிட்டார்கள் என்றால் இறந்தவரின் கழுத்தை நன்றாக நெரிப்பார்கள்.இது பாதுகாப்பாக நெருக்கிய உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் மேற்கொள்ளப்படுகின்றது.முக்கியமாக இத்தீவினர் விதவைப்பெண்கள் மரணிக்கும்போது இதை செய்கின்றார்கள்.இவ்வாறு செய்தால் இவர்களது கடவுளான ருவுயாலோ விதவைப்பெண்ணின் ஆவியை அவளது கணவனுடன் சேர்க்கும் என்பது இவர்களது நம்பிக்கை.இம்முறை தற்பொழுது  படிப்படியாக நிறுத்தப்பட்டு வருகின்றது.

தொங்கவிடுதல்
சவப்பெட்டி என்றதுமே மண்ணில் புதைத்தல்தான் நினைவுக்கு வரும்.ஆனால் சில சமூகத்தவர் இதில் மாறுபட்டிருக்கின்றனர்.இறந்தவரின் உடலை சவப்பெட்டியுடன் சேர்த்து மலைகளில் தொங்கவிட்டுவிடுவார்கள்.உடல்கள் வானத்தினருகில் இருந்தால் சொர்க்கத்தின் அருகில் இருக்கின்றது என்று  இவர்கள் நம்புகின்றார்கள்.குறிப்பாக இந்தோனேஸியா,சீனா,பிலிப்பைன்ஸில் இவ்வாறான சடங்குகளைச்செய்யும் மக்கள் வாழ்கின்றார்கள்.சீனாவில் போ என்று அழைக்கப்படும் மக்கள் இவ்வாறுதான் இறுதிச்சடங்கை செய்கின்றார்கள்.

உடலை உண்ணல்
அமேசன் காடுகளில் வாழும் பழங்குடியினர் இறந்தவர்களை நினைவுபடுத்தலுக்கு ஒரு படிமேலே சென்று இறந்தவர்களை உண்டுவிடுகின்றார்கள்.இதன் மூலம் அஞ்சலி செலுத்தப்படுகின்றது.
1960 வரை வாறி என்ற பழங்குடி இனத்தவர்கள் இவ்வாறு நரமாமிசத்தை உண்டார்கள்.தமது உறவினர்களின் பிரிவால் ஏற்படும் துன்பத்தை நிருத்தவே இவ்வாறு இறந்த உறவினர்களின்  உடலையே உண்கின்றார்கள் என்று மானிடவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.இதுதான் இறந்தவர்களுக்கான மரியாதைக்குரிய அஞ்சலி முறையென்று இப்பழங்குடியினர் நம்புகின்றார்கள்.பின்னர் இது ஏனையோரால் நிறுத்தப்பட்டு இவர்களுக்கு உணவும் மருத்துவ வசதியையும் அளித்தார்கள்.



ஆகாய இறுதிச்சடங்கு


இது தெபெத்திய மக்களால் மேற்கொள்ளப்படுகின்றது.இறந்தவர்களின் உடலை வாழும் உயிரினங்களுக்கு  உணவாகக்கொடுப்பதன் மூலம் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துகின்றார்கள் நினைவுபடுத்துகின்றார்கள.இறந்தவுடன் இறந்தவர்களின் உடலை மலையின் மீதோ அல்லது ஒரு வெளியிலேயே விட்டுவிடுவார்கள் கழுகுகள் போன்றவற்றிற்கு இவை உணவாகும்.பின்னர் பெறப்படும் எலும்புகளை மிருகங்களுக்குபோட்டுவிடுவார்கள்.

உடலை வைரமாக மற்றுதல்
மனிதஉடல் காபனால்தான் ஆக்கப்பட்டது.வைரமும் காபனின் இன்னொரு இருக்கை பிறதிருப்பம் என்றும் கூறுவார்கள்.(அட அதுவும் கரிதான்யா).இறந்தவர்களை நினைவில் தொடர்ந்து வைத்திருப்பதற்கு இறந்தவர்களை  வைரமாக மாற்றி அணிந்துகொள்கின்றார்கள்.இறந்தவர்களின் உடலை எரித்து பெறப்படும் சாம்பலை வெப்ப அமுக்க நிலைகளை அதிகரித்து  வைரமாக மாற்றி ஆபரணமாக அணிந்துகொள்கின்றார்கள்.ஒவ்வொரு ஒவ்வொரு மோதிரமாக காட்டி இது அப்பா,இது அம்மா......இது ஒன்றும் சாதாரண விடயமல்ல இதற்கு செலவு 25 000 டொலர்கள்.

மரத்தில் உடலைகட்டிவிடுதல்
இது அவுஸ்ரேலியப்பழங்குடியினரின் முறை.இறந்தவர்களை பிரம்பாலான கூடைக்குள் இட்டு மரங்களில் கட்டிவிடுவார்கள்.உடல் அழுகும்.ஒரு வருடம் சென்றபின் உறவினர்கள் மீண்டும்வருவார்கள்.வந்து மீதமாக இருக்கும் எலும்புகளை சேகரிப்பார்கள்.இவ்வெலும்புகளில் சிவப்பு நிற காவியைப்பூசுவார்கள்.அலங்காரப்பொருட்களாகப்பயன்படுத்துவார்கள் இது ஒரு நடன நிகழ்வுடன்  நிறைவடையும்.ஒரு குறிப்பிட்ட நாளில் காம் ஒன்றை அமைத்து அலங்கரித்த எலும்புகளை வைத்து ஆடுவார்கள் பாடுவார்கள் இது முடிந்ததும் அவற்றை அங்கேயே விட்டுவிடுவார்கள்.

விண்வெளியில் இறுதியடக்கம்

இறந்தவரின் எலும்புகள் சாம்பலை பொதியாக்கி விண்வெளியில் விட்டுவிடுவார்கள்.இதற்காகவும் கம்பனிகள் இருக்கின்றன.ஆனால் செலவுதான் நினைத்துப்பார்க்க முடியாததாக இருக்கும்.பல சமயங்களில் இவ்வாறு விண்வெளிக்கு அனுப்பப்பட்டவை திரும்பி  பூமிக்கே வந்துள்ளன.நீங்கள் மேலதிகமாக செலவளிக்க விரும்பினால் சந்திரனிலேயே கொண்டு சென்று போட்டுவிடுவார்களாம்.

இறந்தவரின் உடலைக்கூட்டமாக  ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் எடுத்துச்செல்வார்கள்.ஒரு வேளை ஆத்மா திரும்பிவந்தால் அதற்கு உணவு தேவைப்படும் என்று நம்புகின்றார்கள்.இதனால் உடலின் அருகிலேயே உணவுகளை வைத்துவிடுகின்றார்கள்.தீய ஆவிகள் அண்டாமல் இருப்பதற்காகவும்  இறந்தவரின் குடும்பத்தைப்பாதுகாப்பதற்காகவும் நீலக்கற்களையும் உடலின் அருகில் வைத்துவிடுகின்றார்கள்.மொங்கோலிய பழங்குடியினரான லாமா என்றழைக்கப்படும் பழங்குடியினரின் முறை இது.லாமா இனத்தவரைத்தவிர வேறு  யாருக்கும் உடலைத்தொட அனுமதி இல்லை.உடலை பாறைகள் நிறைந்தவெட்டவெளியில் விட்டுவிடுவார்கள்.கழுகுகள் காட்டுவிலங்குகளுக்கு உடல் இரையாகும்  சில நாட்களின் பின்னர் தமது நாய்களை அவிழ்த்துவிடுவார்கள்.மீதியாக இருப்பவை அவற்றிற்கு உணவாகும்.


உடலை கூறுகளாக்கல்

இறந்தபின் இறந்தவரின் உடலை துண்டுதுண்டாக கூறுகளாக்கி இயற்கையுடன் சேர்த்துவிடுதல்.இதன் மூலம் வேறு உயிர்களுக்கு உடல் உணவாகின்றது.உண்மையில் காட்டுமிராண்டித்தனமாக இருந்தாலும் அவர்களது கலாச்சாரம் இது.இதுவும் மொங்கோலிய கலாச்சாரம்தான்.1950 இன் பின்னர் இது ஓரளவிற்குக்கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.திபெத்தை சேர்ந்த புத்தசமயம் இதை ஆதரிக்கின்றது.இம்முறை புத்தசமயத்தில் ஜகாட்டர் என்றழைக்கப்படுகின்றது.புத்தசமயத்தை பொறுத்தவரை உடல் ஒரு கூடு உயிர் இல்லாது விடின் உடல் பயனற்றது.


சிலைகள்
வடக்கு அமெரிக்காவில் வாழும் ஹைடா என்ற பழங்குடியினர் இறந்தவர்களின் உடலை ஊரின் எல்லையில் பெரிய குழிகளைத்தோண்டி அதில் போட்டுவிடுவார்கள் மூடமாட்டார்கள்.இது  அப்பழங்குடியினரின் சாதாரண மக்கள் இறந்தால் இப்படி செய்வார்கள்.ஆனால் ஒரு வீரன் இவ்வாறு இறந்துவிட்டால் அவனின் உடலை சிறுதுண்டுகளாகும் மட்டும் சிதைத்துவிட்டு சிதைந்தஉடல் கூறுகளை ஒரு பெட்டியில் இடுவார்கள்.அவற்றின் மேல் பழங்குடியினரின்  சிலைகளை  ஊர் எல்லையில் நிறுவிவிடுவார்கள்.இவர்கள் ஊரிக்காப்பாற்றுவார்கள் என்பது இவர்களது நம்பிக்கை.

ஸ்கண்டினேவியா-வைக்கிங்ஸ்



இவர்களது கூட்டத்தில் ஒருவர் இறந்துவிட்டால் கல்லினால் ஆக்கப்பட்ட கப்பல்போன்ற கல்லறைகளை அமைத்து புதைப்பார்கள் ஆண்களாக இருந்தால் அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களையும்.பெண்களாக இருந்தால் ஆபரணங்களையும் கூடவே போட்டுப்புதைப்பார்கள்.உணவையும் சேர்த்து புதைப்பார்கள்.வைக்கிங்க் இனத்தவர்கள் இறத்தலின் பின்னரான அடுத்த உலகத்திற்கு படகின் மூலம் செல்லலாம் என்று நம்புகின்றார்கள்.இறந்தபின்னர் நாம் கடவுளுடன் இணைவோம் அப்போது இங்கு பயன்படுத்தியவை தேவை என்று  நம்புகின்றார்கள்.ஒருவர் கடலில் செல்லும்போது இறந்துவிட்டால் அவரின் உடலை படகில் மிதக்கவிடுவார்கள்.சூரியன் மறைந்ததும் வான வேடிக்கைகளுடன் நெருப்பு அம்புகளால் எய்து உடலைக்கொளுத்துவார்கள்.
ஒரு  வீரன் இறந்துவிட்டால் அவன் மீதிருக்கும் அன்பை வெளிப்படுத்துவதர்காக அவனின் மனைவியை வைக்கிங்க்கினர் பகிர்ந்துகொள்வார்கள்.பின்னர் கழுத்தை நெரித்துக்கொன்றதன் பின்னர் அவனுக்கு அருகில் சடலத்தைவைப்பார்கள்.

மண்டையோட்டின் மூலம்

Kiribati என்ற சமூகத்தினர் தமது சமூகத்தில் ஒருவர் இறந்துவிட்டால் அவரை 12 நாட்கள் வரை புதைத்துவிடுவார்கள்.பின்னர் தோண்டி இறந்தவரின் மண்டை ஓட்டை எடுத்து பொலிஸ் செய்வார்கள்.விதயையான பெண்(ஆண் இறந்தால்),இறந்தவனின் பிள்ளை  குறிப்பிட்ட காலம் அந்த மண்டையோட்டினருகில் இருந்துதான் சாப்பிடவேண்டும்,எந்தவிழாவில் பங்குபற்றினாலும் மண்டையோட்டுடனேயே செல்லவேண்டும்.சடங்கு முடிந்ததும் மண்டையோட்டை அலுமாரியில் வைத்துப்பாதுகாப்பார்கள்.இப்படி செய்தால் அவர்களது கடவுளான நாக இறந்தவர்களை சொர்க்கத்திற்கு வரவேற்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

குகைகளில் சடங்கு

ஹவாய்த்தீவுகளில் வாழும் பழங்குடியினர் ஒருவர் இறந்துவிட்டால் அவரை கருவினுள் குழந்தை இருக்கும் நிலைபோன்று கைகளையும் கால்களையும் கட்டுவார்கள்.ஒரு மரப்பட்டையால் உடலை சுற்றிக்கட்டுவார்கள்.சிலவேளைகளில் உடல் உள்ளுறுப்புக்களை எடுத்துவிட்டு உப்பால் நிரப்பிவிடுவார்கள்.பின்னர் குகைக்குள் கொண்டு சென்று வைத்துவிடுவார்கள்.எலும்புகள் கடவுள் சக்திகொண்டவை என்பது இவர்களது நம்பிக்கை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்